நம்மாளுங்க கிட்ட சொந்த சரக்கு இல்லை என்றாலும் சுட்ட சரக்கை, காரசாரமாக பரிமாறும் திறமை நிறையவே இருக்கிறது!! படத்தை பார்த்துவிட்டு நான் சொல்லுவது சரியானு சொல்லுங்க!!

அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு போன்ற ஊனமில்லாமல் பிறப்பது என்று நம் தமிழ் பாட்டி ஒரு காலத்தில் கூறினார். நம் காலத்தில் அரியது கேட்கின்... அரிது அரிது நல்ல மொபைல் கிடைப்பதரிது, அதனினும் அரிது கிடைத்த மொபைலை பாதுகாப்பாக வைத்திருப்பது!! கைப்பேசியை வைத்திருக்கவும், பயன்படுத்தவும் எனக்கு தெரிந்த சில குறிப்புகளை மக்களுக்கு கூறவே இந்த பதிவு.



வாங்குவது குறித்த குறிப்புகள்
1. கடைக்கு செல்வதற்கு முன்பே இனையத்தில் நன்றாக தேடி நல்ல ஒரு மாடலும், பிரான்டும் செலக்ட் செய்து கொள்ளுங்கள். தேடும் போது முக்கியமாக உங்கள் மொபைல் உபயோகத்தன்மையை நன்றாக சிந்தித்துக்கொள்ளுங்கள். அதாவது, "எதற்காக எனக்கு மொபைல்?" என்ற கேள்வியை உங்களுக்குள்ளே கேட்டுப்பாருங்கள். சிலருக்கு புகைப்படம் எடுக்கும் கருவியாக இருக்கவேண்டும், சிலருக்கு இனையம் உலாவும் கருவியாக இருக்கவேண்டும், சிலருக்கு எஸ்.எம்.எஸ் கருவி. இது உங்களுக்கு எந்த மாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற மெகா குழப்பத்துக்கு முடிவு கட்டும்.

2. நோக்கியா போன்ற பெயர் பெற்ற கம்பனி மொபைல்களின் பாதிவிலை அந்த கம்பனியின் பெயருக்காக என்பதை மனதில் வையுங்கள். SE, Motorola, LG போன்ற மற்றவர்களின் மொபைல்களைபற்றியும் படித்துப்பாருங்கள்.

3. குறைந்தது இரண்டு மூண்று கடையிலாவது, விசாரித்துக்கொள்ளுங்கள். விலை குறைப்பு, இலவச மெமரி கார்டுகள் போன்றவை சில கடைகளில் இருக்கும் சிலவற்றில் இருக்காது. புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பல மொபைல்களுக்கு தள்ளுபடி கிடைக்கும்!

4. மெபைல் வாங்கும் போது அட்டைப்பெட்டியின் சீல் சேதமில்லாமல் இருக்கிறதா என்று பாருங்கள். கண்டிப்பாக ரசீதுடன் வாங்குங்கள். மொபைல் அட்டைப்பெட்டியையும், ரசீதையும் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுங்கள். தயவு செய்து அட்டைப்பெட்டியை தொலைத்துவிட, தூக்கிப்போட வேண்டாம்!!! (பின்பு கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கும்)

5. மொபைல் வாங்கும் போது, அதன் Accessories அதனுடனே வருகிறதா என பாருங்கள். சில நோக்கியா மொபைல்களுக்கு, Hands-free, data cable, memory card நீங்கள் தனியாக வாங்கவேண்டியிருக்கும்!

பயன்படுத்துதல் குறித்தவை



1. உபயோகிக்கும் போது பக்கவாட்டில் பிடிக்க வேண்டும், குறைந்த பட்சம் விரல்கள் மொபைல் பின் பகுதியின் மேல் பாகத்தில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். படத்தில் நம்ம கோழியார் பிடித்திருப்பது போல. இது ஆன்டனாவில் இருந்து வெளிப்படும் சிக்னல்கள் உங்கள் விரல்களால் தடுக்கப்படாமல் இருக்க உதவும்.

2. தெருவோரங்களில் விற்க்கும் Flash LEDs வாங்கி மொபைல் ஆன்டனா மேல் ஒட்டுவது, வடிகட்டிய முட்டாள்தனம். உங்கள் மொபைலில் இருந்து வெளிப்படும் ஆற்றலை தேவையற்ற வண்ண வண்ண ஒளியாற்றலாக மாற்றி என்ன பயன்? உங்கள் மொபைலுக்கு சிக்னல் சரியாக கிடைக்காமல் போவதோடு, பேட்டரியும் விரைவாக தீர்ந்துவிடும்.

3. உங்கள் பேட்டரியின் தன்மை அறிந்து சார்ஜ் செய்ய வேண்டும். Li-Ion பேட்டரிகளை நீங்கள் முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்து பின் சார்ஜ் செய்ய வேண்டியதில்லை, மேலும் இந்த வகை பேட்டரி கொண்ட பல மொபைல்களை நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சார்ஜரில் சொருகி வைக்கலாம். Ni-Cad பேட்டரிகள் கொண்ட மொபைல்களை நன்றாக டிஸ்சார்ஜ் ஆன பிறகு சார்ஜ் செய்யவேண்டும், முழுவதுமாக சார்ஜ் ஆனவுடன் சார்ஜரில் இருந்து எடுத்து விடவும்.


4. ஆண்கள், மொபைலை வைக்கும் Pocketக்குள் சாவி கொத்து, சிகரட் லைட்டர்கள் போன்ற எந்த பொருளையும் வைக்க கூடாது. பெண்கள் கைப்பைக்குள் மொபைலை வைக்கும் போது வேறு கடினமான பொருட்களுடன் உரசாதவாறு வைக்கவும்.

5. திரையில் விழும் கீறல்களை தடுக்க பாலிதீன் Screen Guardகளை வாங்கி திரைமீது ஒட்டலாம்.

6. மொபைல்களில் தொடர்ந்து கேம் விளையாடுவதை தவிர்கவும். இதனால் உங்கள் கீப்பேட்கள் சீக்கிரம் கெட்டுவிடும்.

7. மொபைலை கீழே போட்டு விளையாடும் கெட்ட விளையாட்டு கூடவே கூடாது!!!

8. மொபைலில் பேசும் போது, மொபைலில் பேசுங்கள், அதாவது மொபைலை காதில் வைத்துக்கொண்டு பேச்சை நேரடியாக டெலிகாஸ்ட் செய்யாதீர்கள். உங்கள் கூச்சல் மற்றவர்களுக்கு பெரும் தலைவலி என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள். மக்கள் அதிகம் கத்துவது மொபைல் போன் செட்டிங்கில் உள்ள தவறால்தான். மொபைலில் உள்ள ஒலியளவை நீங்கள் இருக்கும் இடத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளுங்கள். ஆபீஸ் போன்ற அமைதியான இடங்களில் குறைவாகவும், சந்தை போன்ற இடங்களில் அதிகமாகவும் வைத்துக்கொண்டால் கத்தாமல் பேசலாம்.

9. Blue tooth, IR முதலியவற்றை எப்போதும் off செய்து வைக்கவும் . தேவை ஏற்படும் போது ON செய்து கொண்டு வேலை முடிந்த உடனே off செய்யுங்கள்!!

கைபேசி மற்றும் உங்கள் பாதுகாப்பு
1. வாகனம் ஓட்டும் போது உபயோகிப்பது தற்கொலைக்கு சமம். நீங்கள் உருப்டியாக ஊரு போய் சேர்வதை தவிற வேறு முக்கியமான விஷயம் எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளவும். தவிர்க்க முடியாத சூழலில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பின் பேசலாம்.

2. மொபைல் தொலைந்து விட்டால், திருடப்பட்டுவிட்டால் உடனே Service providerக்கு செய்தியை சொல்லி SIM கார்டை invalid ஆக்கிவிடவேண்டும். உங்கள் மொபைல் சட்டத்துக்கு புறம்பான காரியங்களில் பயண்படுத்த படலாம். நிச்சயமாக போலீஸிடம் தகவல் தெரிவிக்கவும். (பட்டாப்பட்டி டவுசரோட சிலேட்டில் பெயரை எழுதி ஸ்டேசனில் அமர்ந்து புகைப்படத்துக்கு போஸ் குடுக்கும் லட்சியம் உங்களுக்கு இருக்காது என நம்புகிறேன்!). இந்த இடத்தில் தான் உங்கள் பில் கைகொடுக்கும்!! உங்கள் IMEI நம்பர், மொபைல் அட்டைப்பெட்டி மேல் அச்சிடப்பட்டிருக்கும்.

3. கண்ட இடத்தில் மொபைலை வைத்துவிட்டு போகாதீர்கள். ஹோட்டல்களில் சாப்பிடும் போது மேஜை மேல் வைக்காதீர். ஆண்கள் சட்டை பாக்கெட்டில் வைக்க வேண்டாம்.

4. தயவு செய்து மொபைல்களை பாத்ரூம்/டாய்லட்டுக்குள் எடுத்துச் செல்லாதீர்கள். நீர் அதிகம் உள்ள இடங்களுக்கு போகும் போது பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு செல்லுங்கள்.

5. Mobile usage ethics, கடைபிடியுங்கள். சினிமா தியேட்டர், இரவு நேர ரயில் பயணம், மருத்துவமனை, போன்ற அமைதியான இடங்களில் உபயோகிக்க வேண்டாம்.

பி.கு: "பேராண்டி, ஒலகத்துல ஓசியா கெடைக்கிறதும், ஓசியா குடுக்குறதும் அட்வைசு மட்டும்தான்டா!"னு எங்க ஆத்தா சொல்லியிருக்கா... அதான் கொஞ்சமா அட்வைசை அள்ளித்தெளிச்சுட்டேன். திட்டுறதுனா திட்டிக்கங்க, அதைவிட்டுட்டு படக்குனு கடைக்கு ஓடிப்போய் ஒரு எழுமிச்சம்பழமும், குங்கும பாக்கெட்டும் வாங்கி செய்வினை வைக்கிற வேலையெல்லாம் வேணாம்... ஒடம்பு தாங்காது.

இன்று அலுவலகத்துக்குள் நுழைந்த உடன் கண்ணில் பட்ட விஷயம், என் தோழியின் புடவை கெட்டப். சரி காலையில் சீக்கிரம் எழுந்திருச்சிருப்பாள் என்று எண்ணிக்கொண்டு வேலையில் மூழ்கிப்போனேன். மதியம் உணவு வேளையில் தான் கவனித்தேன் கிட்டத்தட்ட அனைத்து பெண்களும் சேலையில் தான் வந்திருந்தனர். மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்த போது அவளே வந்து கேட்டுவிட்டாள் "ஒரு Women's day வாழ்த்து சொன்னா குறைந்தா போய்விடுவாய் " என்று! நாளைக்கு தான மகளிர் தினம் என்று கேட்டேன். நாளை விடுமுறை என்பதால் இன்றே கொண்டாடுகிறார்களாம். ஏகப்பட்ட இனிப்பு, பரிசுப்பொருட்கள் என ஆபீசையே அமர்களபடுத்திவிட்டனர். ஆண்கள் யாரையும் வேடிக்கைகூட பார்க்க அனுமதிக்கவில்லை! போகிற போக்கைப்பார்த்தால் கூடிய விரைவில் ஆண்கள் 10% இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன்!!





வலையுலக தோழிகளே, சண்டை போடாமல் ஆளுக்கு ஒரு ரோஜாவை எடுத்துக்கொள்ளுங்கள். தங்கள் அனைவருக்கும் எங்கள்(வருத்தப்படாத சிறுவர்கள், வாலிபர்கள் & கிழவர்கள் சங்கம்) சார்பாக

மகளிர் தின வாழ்த்துக்கள்!!

சிறு வயதில் தட்டான் பிடிப்பது (உயிரோடு) என்பது ஒரு கலை. அது எனக்கு கைவந்த கலையாக இருந்தது. சமீபத்தில் எங்கள் வயலுக்கு சென்றிருந்த போது, இன்னும் எனக்கு அந்த திறமை இருக்கிறதா என சோதித்து பார்க்க விரும்பினேன்... மெதுவாக அமர்ந்து ஒரு தட்டானை நோக்கி கையை வீசினேன், அழகாக கைக்குள் சிக்கிக்கொண்டது! லேசாக காலரை தூக்கிவிட்டுக்கொண்டேன்.

தட்டானை கையில் எடுத்தபோதுதான் அதை பார்த்தேன்! தட்டானுக்கு சட்டைபோட்டால் எப்படியிருக்கும் என்று தெரியாது ஆனாலும் தட்டான் முட்டைபோட்டால் எப்படியிருக்கும் என மக்களுக்கு காட்டவேண்டும் என்பதற்காக எடுத்தேன் மொபைலை கிளிக்கினேன் இந்த படத்தை!! (பெரிதாக காட்ட படத்தின் மீது சொடுக்கவும்)



பி.கு: யாரும் தயவு செய்து புளூகிராஸில் சொல்லிவிடாதீர்கள் (என் கிரகம் பிடிபட்ட தட்டானும் ப்ளூ கலரில் இருக்கிறது!)


வண்டி சேலத்தை தாண்டி சிறிது தூரம் வந்திருந்தது. நன்றாக விடிந்து விட்டதால் நான் வேடிக்கை பார்க்க தொடங்கினேன். திடீரென "டமால்(Ka-Boom)" என ஒரு பெரிய சத்தம். எந்த பிரச்சனைக்கும் நான் கடவுளையெல்லாம் தொந்தரவு செய்ததில்லை. இருப்பினும் என்னையறியாமல் "கடவுளே, சத்தம் இந்த பஸ்ஸிலிருந்து வந்திருக்க கூடாது!" என்று வேண்டிக்கொண்டேன். முழுவதுமாக நினைத்து முடிப்பதற்குள் பஸ் ஒரு நிறுத்தத்துக்கு வந்தது. அந்த நேரத்தில் மட்டும் இந்த கடவுள் என் கையில் கிடைத்திருந்தால் கைமா பண்ணியிருப்பேன் ஒரு மனிதனுக்கு இத்தனை சோதனையா??

டிரைவர் இறங்கி வருவதற்குள் நான் குதித்து இறங்கினேன். இப்போது வண்டியை ஓட்டுவது வேறு டிரைவர், கூட அமர்ந்திருப்பது வேறு கிளீனர். பழையவர்கள், ஒரு வேளை சேலத்தில் ரயில் தண்டவாலத்தில் தலையைக்குடுத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. முன்பக்க இடது டையர் முழுவதுமாக உயிரை விட்டிருந்தது!!! டிரைவர் துடிப்பாக அங்கும் இங்கும் எதை எதையோ தேடி ஓடிக்கொண்டிருந்தார். பின்பு தலையில் கையை வைத்து நின்றுவிட்டார். எனக்கு தலை சுற்றியது. என்னய்யா ஸ்டெப்னி இல்லையா என்றேன். ஸ்டெப்னி இருக்கு ஸார் ஆனா ஜாக்கிதான் இல்லை என்றார்.





மயக்கம் போட்டு விழுந்து விடக்கூடாது என்பதற்காக திறந்திருந்த கதவை கெட்டியாக பிடித்துக்கொண்டேன்!!! சரி இப்ப என்ன செய்யலாம் என்று கேட்டேன். ஏதாவது ஒரு லாரியை நிறுத்தி ஜாக்கியை வாங்கலாம் சார் என்றார் டிரைவர். அனைத்து லாரி டிரைவர்களுக்கும் பர்வீன் மீது கெட்ட காண்டு என்று நினைக்கிறேன். எங்களை பார்த்தவுடன் ஒதுங்கிக்கூட போகாமல் உரசிக்கொண்டு போனார்கள். எனக்கென்னவோ அடுத்து வரும் லாரியை நிறுத்த முயன்றால் நிச்சயம் நசுக்கிவிடுவான் என்று தான் தோன்றியது. பஸ்ஸில் இன்னும் சில பயணிகள் கடும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். "இந்த ரணகளத்திலும் குதுகலமாய்" இருக்கும் அவர்கள் மீது பொறாமையாக இருந்தது. எங்களோடு இன்னும் சில பயணிகள் சேர்ந்துவிட்டனர். எங்களது பாவப்பட்ட முகங்களை பார்த்து ஒரு லாரி டிரைவர் வண்டியை நிறுத்தி ஜாக்கி கொடுத்து உதவினார். ஜாக்கியை எடுத்துக்கொண்டு கிளீனர் பஸ்ஸுக்கடியில் சென்றார். நான் மொபைலை எடுத்து பர்வீன் ஆபீசுடன் தொடர்புகொள்ள முயன்றேன்.



மொபைலில் ஒரு 15 நிமிட வாக்குவாதத்துக்கு பின் பர்வின் ஆபீஸிலிருந்து வேறு பஸ் அனுப்ப முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர். எப்படியும் பஸ் ரெடியாகிவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்க ஆரம்பித்தோம். ஒரு மணி நேரம் ஆனது எந்த முன்னேற்றமும் இல்லை. நான் குனிந்து பஸ்ஸுக்கடியில் இருந்த கிளீனரிடம் என்ன ஆச்சு என்று கேட்டேன். பஸ்ஸின் அடிப்பாகம் மிகவும் தாழ்வாக இருந்ததால் ஜாக்கியை ஃபிட் பண்ண முடியவிலை என்றார்!!!! இதை கண்டு பிடிக்க ஒன்னேகால் மணிநேரம்!! இதற்குமேல் அங்கே நின்றால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றியது. நானும் என் தங்கையும் நாமக்கல் நோக்கி செல்லும் பஸ்களை நிறுத்திப்பார்த்தோம்... ஊஹூம் யாரும் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எனக்கென்னவோ பர்வீன் பஸ் பக்கத்தில் நிற்பதால்தான் இந்த பிரச்சனை என்று தோன்றியது. சற்று தூரம் நடந்து சென்று பிறகு பஸ்ஸை நிறுத்த முயற்சித்தோம், சரியாக யூகித்தீர்கள் பஸ் எங்களை ஏற்றிக்கொண்டது. நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழியில் நடுரோட்டில் 9,00 மணி பர்வீன் பயணிகள் யாருமில்லாமல் அம்போ என நின்றிருந்தது! இந்த உலகத்தில் நாம் மட்டுமே பாவப்பட்ட ஜென்மம் இல்லை என்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் வண்டிகள் அனைத்தும் கூட்டமாக இருந்ததால். ஒரு கூட்டமில்லாத வண்டியை பார்த்து ஏறினோம். அந்த வண்டி மெயின் ரோட்டிலிருந்து விலகி செம்மன் காடு, வயல் வெளி, எல்லாம் சுற்றிக்கொண்டு சுமார் 2 மணி நேரம் 15 நிமிடம் கழித்து திண்டுக்கல் வந்தது. அடுத்து நான் எந்த புதிய அனுபவத்திற்கும் தயாராக இல்லை, அதனால் திண்டுக்கல்லில் இருந்து சோலைமலை பஸ்ஸில் செல்ல தீர்மானித்தேன். வண்டி கிளம்ப 45 நிமிடம் ஆகும் என்றார்கள், இருந்தாலும் பரவாயில்லை என்று ஒரு ஜூஸை குடித்துவிட்டு காத்திருந்து ஏறினோம். ஒரு வழியாக 18 மணி நேர பயணத்துக்குப்பின் மதுரை வந்து சேர்ந்தோம்!!!!!!!!!!!!!!!!!!!!!!! லக்கி லுக் பாணியில் சொல்ல வேண்டுமானால் "மதுரை வந்து சேர்வதற்குள் தாவுதீர்ந்து டவுசர் கிழிந்து விட்டது!"

இது பர்வீனில் எனக்கு முதல் அனுபவமல்ல, இந்த பயணத்துக்கு சில மாதம் முன்பு நானும் என் நண்பனும் பர்வீனில் சென்றோம். நான் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தேன். சேலம் பேருந்து நிலையத்தை தான்டும் போது திடீரென எனக்கு மேலிருந்து தீப்பொறிகள் கொட்டின! அருகில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் படார் என்ற சத்தத்துடன் தீப்பற்றிக்கொண்டது. எனக்கு பயங்கர குழப்பம்! பிறகு தான் தெரிந்தது பர்வீனில் ஏற்றியிருந்த goods மிகவும் அதிகமாக இருந்ததால் ஒன்றன் மேல் ஒன்றாக உயரமாக அடுக்கியிருந்தனர். அது மேலே சென்று கொண்டிருந்த மின்சார கம்பிகளோடு விளையான்டு இந்த வானவேடிக்கை காட்டியுள்ளது. சில வினாடிகள் வண்டி நின்றது, "சுனா, பானா உனக்கு ஒன்னும் இல்லை போயிக்கிட்டே இரு..." என்று என் நண்பன் முனுமுனுக்கவும் வண்டிகிளம்பவும் சரியாக இருந்தது. சிறிது தூரம் சென்ற பிறகு வண்டி ஒரு இடத்தில் நின்றிருந்தது, இறங்கிப்பார்த்த போது நான்கு பக்க டயர்களிளும் காற்று மிகக்குறைவாக இருந்தது. எனக்கோ ஒரே ஆச்சர்யம் எப்படி ஒரு வண்டியில் ஒரே நேரத்தில் இத்தனை டையர்கள் பஞ்சர் ஆகும். பிறகு கிளீனர் சொன்னார் வண்டியின் உயரத்தை குறைப்பதற்காக காற்றை கழட்டிவிட்டார்களாம்!!!!!! இதில் இன்னொரு அதிசயம் என்ன வென்றால் அந்த பஸ் குறைந்த காற்றோடு மதுரை வந்து சேர்ந்து விட்டது (3 மணி நேரம் தாமதமாக)!!

மேட்டர் தெரியுமா உங்களுக்கு? நமது கில்லி, இளைய தளபதி, டாக்டர்(?) ஜோசப் விஜய் தனது கட்சிக்கு, Ooopsie... மன்னிக்கனும் தனது மன்றத்துக்கு கொடி அறிவிக்கப் போகின்றாராம்!!!!


நம்ம நாட்டுல இந்த கொடிகளோட தொல்லை தாங்கமுடியலைப்பா, கர்நாடகாவுல தேசியக்கொடி பறக்குதோ இல்லையோ தெருத்தெருவுக்கு சிகப்பு மஞ்சள் கொடி பறக்குது. போகின்ற போக்கில் எக்கச்சக்கமான கொடிகளை பார்த்து நமக்கெல்லாம் நமது தேசியக்கொடி மறந்து போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தெரு ஓரம்(?) நடப்பட்டிருக்கும் கொடிக்கம்பங்களை ரோடு போடும் போது மாநகராட்சி அகற்றுவதற்கு படும் பாடு இருக்கே, சொல்லி மாளாது!

எப்படியோ முதலமைச்சர் சீட்டுக்கு அடுத்த போட்டியாளர் ரெடியாகிக்கிட்டிருக்கிறார்!!! வாங்க விஜய் வந்து நீங்களும் சீக்கிரம் களத்துல குதிங்க!!

பார்க்க சுட்டி: ThatzTamil


முதலில் நான் கடிகாரத்தை, ஓடுகிறதா என்று பார்த்தேன் நிச்சயமாக ஓடுகிறது மொபைலும் 2,35 என்றுதான் காட்டுகிறது. வெளியே எட்டிப் பார்த்தேன் நிச்சயமாக பெங்களூரேதான்!! வண்டி கிளம்பி கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஓடியிருக்கிறது இருப்பினும் பெங்களூரை தாண்டவேயில்லை. சகபயணிகள் அனைவரும் பயங்கரமாக தூங்கிக்கொண்டிருந்தனர். நீட்டி நிமிர்ந்து படுத்தால் தான் எனக்கு தூக்கம் வரும், எனவே பஸ் தூக்கமெல்லாம் அரைகுறைதான். சிலர் குறட்டைகூட விட்டுக்கொண்டிருந்தனர். கடும் குழப்பத்தில் டிரைவர் கேபின் சென்று கதவைத்தட்டினேன் (சற்று பலமாக தட்டியதில் நிச்சயம் டிரைவர் பயந்திருக்ககூடும்). டிரைவர் கூடவரும் ஆள் (கிளீனர்/2ம் டிரைவர்) கதவைத்திறந்தார். இருந்த கடுப்பில் நிச்சயம் அடித்திருப்பேன் தனியாக வந்திருந்தால்! கோபத்தை அடக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தேன்

நான்: என்னங்க நடக்குது இங்கே? மணி ரெண்டே முக்காலாச்சு இன்னும் பெங்களூர் கூட தாண்டல!
டிரைவர்: சார் வண்டி பிரேக்-டவுன் ஆகிருச்சு.
நான்: பிரேக்-டவுனா?? வண்டி தான் எங்கயுமே நிக்கலையே?
டிரைவர்: ஒன்னும் பிரச்சனை இல்லை சார் எல்லாம் சரியாகிருச்சு

பேசிக்கொண்டிருக்கும் போதே வண்டி மெயின் ரோட்டிலிருந்து விலகி அடர்ந்த யூகலிப்டஸ் காட்டுக்குள் செல்லும் ஒற்றையடிப்பாதையில் புகுந்தது! இருந்த கோபமெல்லாம் பயமாக மாறியது, தனியாக வந்திருந்தாலும் எதையும் சந்திக்கலாம், தங்கைவேறு கூட இருக்கிறாளே!!

நான்: இப்ப எங்கயா போய்க்கிட்டிருக்கீங்க??
டிரைவர்: சார் எங்க வண்டி ஒன்று டீசல் இல்லாம மாட்டிக்கிச்சு அதுக்குதான் டீசல் வாங்க பெங்களூருக்குள் போயிருந்தோம்
நான்: ?????!!!!!!! (கடுமையான குழப்பம்)

எதற்காக அவர்கள், காட்டுக்குள் மாட்டிக் கொண்டார்கள்?? அது என்ன வண்டி?? டீசல் வாங்குவதற்க்கு இத்தனை பேர் கொண்ட பஸ்ஸையா எடுத்துச் செல்வார்கள்?? இவர்களிடம் ஃபோன் இல்லையா?? ஆபீஸுக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்காமல் ஏன் இப்படி ஊரை சுற்றுகிறார்கள்?? என ஏகப்பட்ட கேள்வி மனதுக்குள்!
எனக்கு ஒரு விஷயம் புரிந்து விட்டது இவர்களிடம் தமிழ்நாட்டிற்க்குள் நுழைவதற்க்கு அனுமதி இல்லை!! இது போல ஒரு பர்வீன் சம்பவம் பற்றி என் நண்பன் முன்பு கூறியிருந்தான்!

நான்: உங்களிடம் தமிழ் நாட்டுக்குள் நுழைய பெர்மிட் இல்லை என்றால் முன்னமே கூறியிருக்க வேண்டாமா?? வண்டியை பெங்களூருக்கு திருப்புங்கள் (உச்ச பட்ச டெசிபெல்லில் கத்தினேன், இந்த நிலையில் பெங்களூர் திரும்புவதுதான் பாதுகாப்பானது என்று தோன்றியது)
டிரைவர்: சார் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை, இப்படியெல்லாம் பேசாதீங்க சார் (கிட்டத்தட்ட அழுதுவிடுவான் போல இருந்தது)
நான்: சரி மதுரைக்கு கொண்டு போய் சேக்குறாப்புல ஐடியாவாவது இருக்கா??
டிரைவர்: (மௌனம்)

நான் போட்ட கூச்சலில் முன் சீட்டி அமர்ந்திருந்த பயணி எழுந்து விட்டார், எங்கள் பேச்சை கேட்டுக்கெண்டிருந்தவர் நிலமை புறிந்ததும் சண்டையை அவர் தொடர்ந்தார். நான் சீட்டில் வந்து அமர்ந்து என்ன செய்யவேண்டும் என்று யோசித்தேன்! எனக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது இந்த நடுக்காட்டுக்குள் வண்டியில் இருப்பதை தவிர வேறு வழியில்லை என்று!! சிறிது நேரத்தில் வண்டி திடீர் நிறுத்தத்திற்கு வந்தது. நின்ற இடம் நடுக்காடு!!!

இருக்கையிலிருந்து எழுந்து டிரைவர் கேபினுக்குள் நுழைந்தேன். எங்கள் பஸ்ஸுக்கு முன் வேறு ஒரு பஸ் நின்றிருந்தது. எங்களுக்கு முன் நின்றிருந்த வண்டி, எங்களுக்கு சற்று முன்னால் கிளம்பிய 9,00 மணி மதுரை வண்டி!! அதற்க்கும் முன்னால் ஒரு செக் போஸ்ட்!!!!!

அங்கே ஏற்கனவே பேய் முழி முழித்துக்கொண்டு ஒருவன் செக்போஸ்ட் அதிகாரி அருகில் கையைக்கட்டி நின்று கொண்டிருந்தான். 10 நிமிடம் ஏதேதோ பேசினார்கள், எங்கள் டிரைவர் கையில் இருந்து ஒரு சிறிய கவர் கைமாறியது. பேய் முழி முழித்துக் கொண்டிருந்தவன் முகத்தில் புண்ணகை, செக் போஸ்ட் ஆபீசருக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டு 9,00 மணி வண்டிக்குள் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்தான்! எங்கள் டிரைவரும் வந்து வண்டியை கிளப்பினார். மணி 3,00 ஒரு வழியாக செக்போஸ்ட் தாண்டியாகிற்று! அப்பாடா என்று ஒரு பெருமூச்சு விட்டேன்.

மீண்டும் சீட்டில் வந்து அமர்ந்தேன், டிரைவரிடம் சண்டை போட்ட அந்த சக பயணி, தான் எழுந்து பார்த்த போது ஓசூர் மெயின் ரோட்டில் உள்ள செக்போஸ்டில் வண்டி நின்றிருந்ததாக கூறினார். அப்படியென்றால், அங்கிருந்து இந்த இரண்டு வண்டிகளும் திருப்பி கர்நாடகாவுக்குள் அனுப்பப்பட்டிருக்கின்றன, இவர்கள் காட்டுக்குள் இருக்கும் செக்போஸ்ட் வழியாக தப்பிச்செல்ல முயன்று கையும் களவுமாக பிடிபட்டிருக்கின்றனர்! இதில் பின்னால் வந்த பஸ் திரும்பிச்சென்று பெங்களூரில் உள்ள ஆபீசில் பணத்தை பெற்றுக்கொண்டு, செக்போஸ்ட் ஆபிசர் ட்யூட்டி மாறியதும், லஞ்சத்தை கொடுத்து ஒரு பெரிய நாடகத்தையே நடத்தியிருக்கின்றனர்!!!

எப்படியோ ஒரு வழியாக ஒசூருக்குள் வந்து விட்டோம். வண்டி அங்கே ஒரு கடையில் நின்றது! சட்டென்று என் முன்னால் இருந்த பயணி எழுந்து, நேரம் பார்த்து, பையை எடுத்துக்கொண்டு இறங்கத் தயாரானார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னிடம் திரும்பி "ஏங்க! கரூர் வந்திருச்சுல்ல??" என்றார் அப்பாவியாக!! நான் சிரிப்பை அடக்கமுடியாமல் பயங்கரமாக சிரித்துவிட்டேன். "இல்லை இன்னும் ஓசூரில் தான் இருக்கிறோம்" என்றேன் சிரிப்பினூடே. அவர் ஆச்சர்யமடையாமல், நிம்மதியடைந்தார் சட்டென்று பையை மேலே வைத்தார், இருக்கையில் அமர்ந்தார், தூங்கிப்போனார்!!!!

சிரித்து சிரித்து கோபம் குறைந்து மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது. எப்படித்தூங்கினேன் என்று தெரியவில்லை தூங்கிப்போனேன். எழுந்த போது மணி காலை 7,30 தங்கையை பார்த்தேன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள். சேலத்திலிருந்து ஒரு 35 கி.மீ தாண்டியிருந்தோம். சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த போதுதான் அது நிகழ்ந்தது!

இது பர்வீன் டிராவல்ஸால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவியை பற்றிய உண்மைக்கதை (கொஞ்சம் காமடியான கதை)! அந்த அப்பாவி வேற யாரும் இல்லைங்க நானே தான்!!

அது ஜூன் மாதம் 30, 2006; நானும் என் தங்கையும் பெங்களூரில் இருந்து மதுரைக்கு கிளம்பிக்கொண்டிருந்தோம். நாங்கள் பர்வீன் டிராவல்ஸில் டிக்கட் எடுத்திருந்தோம். டிக்கட்டில் பஸ் 9:40 PM க்கு மடிவாலாவில் பிக்கப் செய்யும் என எழுதியிருந்தது. நாங்கள் மடிவாலாவுக்கு 9:20 க்கு வந்து சேர்ந்தோம் (ஆனால் ரிப்போர்டிங் டைம் 9:00 என்று டிக்கட் சொல்லியது). பர்வீன் ஆபீசுக்கு சென்று அங்கு அமர்ந்திருந்தவரிடம் டிக்கட்டை காட்டினேன், அவன் அதை சற்றும் கண்டுகொள்ளாமல் "கொஞ்சம் பொறுங்கள் பஸ் வந்து கொண்டிருக்கிறது" என்றான். பக்கத்தில் ஒருவர் சென்னை டிக்கட்டை காண்பித்துக்கொண்டிருந்தார், அவருக்கும் இதே பதில்! அவன் டிக்கட்டை கூட பார்க்காமல் சொன்னதும் அவருக்கு ஆச்சர்யம், நிச்சயம் மூஞ்சியில் "இவர் 8,30 பஸ்ஸில் சென்னை போகிறார்" என்று எவனும் எழுதி ஒட்டிவிட்டானா என்று கண்ணாடியில் பார்த்திருப்பார். ஆனால் அவன் கூறிய வார்த்தைகள் பர்வீனில் பயணிக்கும் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று!

இருப்பினும் சில அப்பாவி பயணிகள் ஆபீஸ் முன் தங்கள் காத்திருத்தல் விளையாட்டை ஆரம்பித்தனர்!! நான் கடைக்கு சென்று தண்ணீர் வாங்கிக்கொண்டு என் தங்கை கொண்டு வந்த நூடுல்ஸை சாப்பிட ஆரம்பித்தேன். மீண்டும் பர்வீன் ஆபீசுக்கு 9,55க்கு வந்தோம், அங்கு ஒருவர் அந்த ஆபீஸ் அட்டன்டன்ட்டிடம் பேசிக்கொண்டிருந்தார், விவாதம் சூடாக இருக்கவே நின்று கேட்க தொடங்கினேன்...

பயணி: யோவ் என் பஸ் 9,00 மணிக்கு வரவேண்டியது
பணியாள்: இந்தா வந்துரும் சார்
பயணி: எப்போ??
பணியாள்: சார் உங்களுக்கு பெங்களூர் டிராஃபிக் பத்தி தெரியாதா என்ன?
பயணி: அப்ப என்ன எழவுக்குயா 8,30 க்கு வரனும்னு சொன்னீங்க??
(பாவம் இந்த அப்பாவி டிக்கட்டில் எழுதியிருக்கும் Reporting Time என்ற காமடியை சீரியஸாக எடுத்துக்கொண்டார் போலும்)
பணியாள்: (எக்கச்சக்கமான மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கடுப்பாகி) நான் பர்வீன்ல வேலை பாக்க வந்தேன் பாருங்க என்ன பிஞ்ச செருப்பாலையே அடிச்சுக்கனும்.
(சட்டென்று எழுந்து ஓட்டமும் நடையுமாக ஆபீஸுக்குள் நுழைந்து கொண்டார்)

மணி 9,58 ஒரு வழியாக 9 மணி பஸ் வந்து சேர்ந்தது, பின்னாலேயே 9,40 பஸ்!! உலக அதிசயம் VIII!!! நான் பஸ்சில் ஏறும் போது, கூட ஏறியவரின் டிக்கட்டை கவனித்தேன், அவரது டிக்கட்டில் பஸ் டைமிங் 9,30 என்று இருந்து கட்டணம் 400 ரூ-வாக இருந்தது. என் டிக்கட்டில் நேரம் 9,30 என்றும் கட்டணம் 500 ரூ என்றும் இருந்தது. எனக்கு அப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பித்துவிட்டது!! பின்பு தெரிந்து கொண்டேன் ஒரு ஒருவருக்கு ஒரு unique நேரமும் கட்டணமும் குறிக்கப்பட்டுள்ளது என்று. பஸ்ஸில் இட ஒதுக்கீட்டு குழப்பங்களுக்கும், அமளி துமளிக்கும் நடுவே ஒருவன் வந்து அனைவரிடமும் டிக்கட்டை வாங்கிக்கொண்டு போனான். அப்போது எங்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை இது எப்பேர்பட்ட தந்திரம் என்பது!

பஸ் A/C செய்யப்பட்டிருந்தது, VOLVO பஸ்களை போல வெளியே உயரமாக இருந்தது இருப்பினும் இது VOLVO பஸ் இல்லை. உள்ளே மற்ற ஏர் பஸ்களை போல தாழ்வான இருக்கைகள் தான். இந்த பஸ்ஸெல்லாம் கவுந்தால் கவுத்துப்போட்ட ஆமை மாதிரி எந்திரிக்கவே முடியாது என்று தோண்றியது.

பஸ்சில் ஒவ்வொரு இருக்கையிலும் ஒரு அழகான 6 இன்ச் LCD டீவி இருந்தது (விமானத்தில் இருப்பதைப்போல!). அந்த வினாடியில் என் வாழக்கையில் பார்த்த சிறந்த பஸ் எது என்று கேட்டால் இந்த பஸ்தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லியிருப்பேன்! ஒரு சக பயணி ஆர்வ மிகுதியால் ஏன்பா "இந்த டீவியை கொஞ்சம் போடுங்கப்பா" என்றார். டிரைவர் "சார் டீவியை போட்டா ஏசி ஓடாது" என்றதும் கடுப்பாகி அந்த பயணி "அப்ப பேசாம இஞ்சின நிருத்திருயா" என்றார். சிறிது நேரத்தில் பஸ் கிளம்பி ஓட ஆரம்பித்தது... நானும் முந்தய இரவில் ஆபீஸில் கண்முழித்து வேளை பார்த்த அசதியில் தூங்கிப்போனேன். பஸ் நிற்காமல் ஒடிக்கொண்டே இருந்ததை உணரமுடிந்தது.

மறுநாள் காலை 2,30 க்கு வண்டி ஒரு இடத்தில் நின்றிருந்தது. என்ன நடக்கிறது என்று கீழே இறங்கிப்பார்தேன். அங்கே டிரைவர் ஒரு பெரிய கேன் எடுத்து டீசல் வாங்கிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக வண்டி சேலத்தை தாண்டிவிட்டது என நினைத்து சந்தோஷப்பட்டேன். மீண்டும் பஸ் கிளம்பியது நானும் வண்டியில் ஏறினேன். என் தங்கை தூக்கம் கலைந்து "எங்கணே இருக்கோம்" என்று கேட்டாள் நானும் சிரத்தையாக "சேலத்தை தாண்டி வந்துட்டோம்னு நினைக்கிறேன்" என்றேன். பிறகு இருக்கையில் அமர்ந்ததும் மொபைலை எடுத்து ஏரியா பார்த்த போது "Electronics City" என்று காட்டியது!!!! நாங்கள் இன்னும் பெங்களூரில்தான் இருந்தோம்!!!

நீங்கள் நீலச்சட்டை போட்டுக்கொண்டு பந்தடிப்பவர்களை மெச்சுபவர் இல்லையா?? நீங்கள் கிரிக்கெட் என்ற விளையாட்டில் ஆர்வம் இல்லாதவரா??? ஆம், என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு தேச துரோகி! அட, நான் சொல்வது உண்மைதான், பல கோடி மக்கள் வாழும் இந்த மாபெரும் துணைக்கண்டத்தின் மானத்தையும், புகழையும் காப்பது யார் என்று நினைத்தீர்கள்?? இந்த நீல சட்டை வீரர்கள் தான்! நீங்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் பிரதமருக்கோ, தேர்ந்து எடுக்கும் உங்களுக்கோ இந்த நாட்டின் மானத்திற்கோ எந்த சம்மந்தமும் இல்லை என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? "Who represents India?" என்று ஒரு உண்மைக் குடிமகனிடம் கேளுங்கள் "Men in Blue" என்று அழகாக சொல்லுவார்கள். அப்ப ஜனாதிபதியெல்லாம் சுத்த வேஸ்ட்டா என்ற அபத்தமான கேள்வியை கேட்டால் "யாரோ ஒரு அம்மாதான் ஜனாதிபதி ஆனா அந்தம்மா பேருதான் நியாபகத்தில் இல்லை" என்று பதில் கிடைக்கும்!

ஒரு ஒரு ஒலிம்பிக் போட்டிகளிளும் ஒரு வெங்கலம் அல்லது ஒரு வெள்ளி வாங்குவது இந்தியாவுக்கு பெருமையாம், இந்த நீலச்சட்டை நாயகர்கள் ஒரு நாள் உலகக் கோப்பையில் வெளியேறியது இந்தியாவுக்கு பெரும் அவமானமாம்?? உலகில் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளில் வெறும் 10 நாடுகள் பங்கு பெரும் கிரிக்கெட் போட்டி எப்படி உலகக் கோப்பையானது என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை. அனைத்து நாடுகளும் பங்கு பெரும் ஒலிம்பிக் ஒரு பொருட்டே அல்ல!!

முதலில் இந்த நீலச்சட்டை நாயகர்களின் யோக்யத்தை பார்கலாம். இந்த நீலச்சட்டை விரர்கள் BCCI என்ற பணம் காய்க்கும் நிறுவனத்தின் செல்லப்பிள்ளைகளே அன்றி இந்தியாவின் நேரடி செல்லப்பிள்ளைகள் அல்ல (உண்மையில் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை தாங்கிப்பிடிக்க ஒலிம்பிக் வீரர்கள் தான் வேண்டுமேயன்றி இந்த நீலச்சட்டைகரர்கள் அல்ல). போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக பயிற்சியில் ஈடுபடுவது போல் பத்திகைக்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு தண்ணியைப்போட்டு மட்டையாகிக் கிடந்த மேட்டர் இவர்கள் தோத்தால் மட்டும் பத்திரிகையில் இடம்பெரும். இவர்களில் எத்தனை பேர் வருமான கணக்கு சரியாக காண்பித்து வரி செழுத்துகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? உண்மையைக்கூற வேண்டும் என்றால் சரியாக வரி செழுத்தாமல், சரியாக விளையாடாமல் கிடைத்த பெயரை பணமாக்குவதிலேயே குறியாக இருக்கும் இவர்கள் அல்லவா தேச துரோகிகள்?

இவர்கள் எந்தக்காலத்திலும் திருந்த மாட்டார்கள் திருந்த வேண்டியது நாம்தான், கிரிக்கெட் ஒரு சாதாரன விளையாட்டு இதுவும் சினிமா போல ஒரு பொழுதுபோக்கு, இதை நாட்டோடு சம்மந்தப்படுத்தி கொண்டாடாமல் இருப்போம்!!